9:00க்கு தேர்வறைக்குள் இருக்கணும்.
12/03/2016
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவோர், காலை, 9:00 மணிக்கு, தேர்வறையில்
இருக்கும் வகையில், முன்னதாக, மையத்துக்கு வர வேண்டும் என,
அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் கே.எஸ்.சி., அரசு பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில், தலைமை ஆசிரியர் சதாசிவம் பேசியதாவது: தேர்வு நேரத்தை, மாணவர்கள்
முறையாக பின்பற்ற வேண்டும். காலை, 9:00 மணிக்கு, முதல் மணி அடிக்கும் போது
தேர்வறைக்குள் இருக்குமாறு, மையத்துக்கு வர வேண்டும். 9:10க்கு, இரண்டாவது
மணி அடிக்கும்போது, மாணவர் முன்னிலையில், வினாத்தாள் உறை பிரிக்கப்படும்.
9:15க்கு, மூன்றாவது மணி அடித்ததும், வினாத்தாள் வழங்கப்படும்.
10 நிமிடங்கள் வாசித்து பார்க்க, அவகாசம் தரப்படும். 9:25க்கு, நான்காவது
மணி ஒலித்தவுடன், விடைத்தாள் வழங்கப்படும். முகப்பு தாள் சரிபார்த்தபின்,
9:30க்கு ஐந்தாவது மணி ஒலித்தவுடன், தேர்வு எழுத துவங்கலாம்.
விடைத்தாளில் உள்ள முகப்பு தாளை சேதப்படுத்தக் கூடாது; வரைபடம் மற்றும்
கோடு வரைய, பென்சிலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஓரிரு பக்கங்களில்
எழுதியதை அடித்தால், "என்னால் அது அடிக்கப்பட்டது' என, எழுத வேண்டும்.
விடைத்தாளில் மொத்த பக்கங்களையும் அடித்தால், இரண்டு பருவத்தேர்வுகளை எழுத
முடியாது.
உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அசைவ உணவை அதிகமாக
சாப்பிட்டு, உடல்நலத்தை கெடுத்துக் கொள்ள கூடாது. பள்ளியில் நடத்தப்படும்
சிறப்பு வகுப்புகளுக்கு, மாணவர்கள் கட்டாயம் வர வேண்டும்; ஆசிரியர்கள்
கூறும் தேர்வு "டிப்ஸ்', அதிக மதிப்பெண் பெற உதவும். தேர்வறையில் எந்த
சந்தேகம் இருந்தாலும், அங்குள்ள அறை கண்காணிப்பாளரிடம் மட்டுமே கேட்க
வேண்டும்; சக மாணவர்களிடம் கேட்கக்கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.
0 comments:
Post a Comment