"தொடு சிகிச்சை மூலம் மூட்டு வலியை குணப்படுத்தலாம்'

17/04/2016

                        காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் தொடு சிகிச்சை மூலம் மூட்டு வலியைக் குணப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.
                            காரைக்கால் சேவா பாரதி மற்றும் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் நிர்வாகம் சார்பில், அம்மையார் மணி மண்டபத்தில் நியூரோதெரபி என்கிற நரம்பு தொடு சிகிச்சை முகாம் நடைபெற்றது. திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் அதிகாரி எஸ்.கே.பன்னீர்செல்வம் முகாமை தொடங்கிவைத்துப் பேசியபோது, ஆங்கில மருத்துவத்திலிருந்து மக்கள் ஹோமியோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா போன்ற மாற்று மருத்துவத்துக்கு மாறிவருகின்றனர். பக்க விளைவுகள் இல்லாத, சிறந்த மருத்துவத்தை மக்கள் தேர்ந்தெடுக்க விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.
                    முதுநிலை நியூரோதெரபி ஆலோசகர் ஏ.கே.ராமன் பங்கேற்று, தொடு சிகிச்சையின் மகத்துவம் குறித்துப் பேசும்போது, நரம்பை தூண்டும் விதத்தில் செய்யப்படும் இந்த சிகிச்சையின் மூலம் கழுத்து வலி உள்ளோர், மூட்டு வலி உள்ளோர் குணமடையமுடியும். ரத்தத்தில் சிகப்பு அணுக்களை அதிகரித்தல், ஆஸ்துமாவை போக்குவது, தொடக்க நிலை புற்றுநோயை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோய்களை நியூரோதெரபி மூலம் குணப்படுத்தமுடியும் என்றார். மேலும், முகாமில் கலந்துகொண்டோரை பரிசோதித்து, நோய் பாதிப்புள்ளோருக்கு ஆலோசனை வழங்கினார்.
                 முகாமில், ஸ்ரீ கைலாசநாதர் கோயில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி, தென் தமிழக சேவா பாரதி மாநில பொதுச் செயலர் டி.சீனிவாசராகவன், ஆரோக்கியம் மாநில ஒருங்கிணைப்பாளர் என்.ஆனந்தபகவதி ஆகியோர் பேசினர். காரைக்கால் சேவா பாரதி பொறுப்பாளர் ஏ.முருகன் வரவேற்றார். நடேசவைத்தியநாதன் நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment