பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் பள்ளிகளில்"வாக்கிங்' செல்ல... கட்டுப்பாடு!

பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் பள்ளிகளில்"வாக்கிங்' செல்ல... கட்டுப்பாடு!

04/03/2016

        திருப்பூர் மாவட்டத்தில், 64 மையங்களில், பிளஸ் 2 தேர்வு இன்று துவங்குகிறது; 23,578 பேர் எழுதுகின்றனர்.
 
        பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்கி, ஏப்., 1ல், நிறைவடைகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், தனியார் என, 186 பள்ளிகளை சேர்ந்த, 10 ஆயிரத்து, 240 மாணவர்கள்; 12 ஆயிரத்து, 502 மாணவியர் என, 22 ஆயிரத்து, 742 பேர் மற்றும் தனித்தேர்வர்கள், 836 பேர் என, மொத்தம், 23 ஆயிரத்து, 578 பேர் எழுதுகின்றனர். 64 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


முதல் நாளான இன்று, தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது. மையங்களை கண்காணிக்க, சிறப்பு பறக்கும்படைகள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வறை கண்காணிப்பாளர், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும், தேர்வு மையத்தில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவியர், மொபைல் போன் வைத்திருக்கும் பட்சத்தில், பறிமுதல் செய்யப்படும். பள்ளி வளாகத்தில்புத்தகங்கள் வைக்கும் பகுதியில், மொபைல் போனை வைத்துச் சென்றால், காணாமல் போக வாய்ப்புள்ளதால், அதை கட்டாயம் தவிர்க்க, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தேர்வு நடக்கும் மையங்கள், தடை செய்யப்பட்ட பகுதிகள்; அப்பகுதிக்குள், அன்னிய நபர்கள் வரக்கூடாது. தேர்வு மையங்களுக்கு அருகில் பொதுக்கூட்டம், ஒலிப்பெருக்கி பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

"வாக்கிங்' கட்டுப்பாடு

மாநகர பகுதியில், "வாக்கிங்' செல்ல, போதிய இடவசதி இல்லாததால், பொதுமக்கள் பலரும், கே.எஸ்.சி., அரசு பள்ளி,நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி வளாகங்களில் காலை, மாலை நேரங்களில், "வாக்கிங்' செல்கின்றனர். வாலிபர்கள், விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். இப்பள்ளிகள், தேர்வு மையங்களாக உள்ளதால், "வாக்கிங்' செல்வோர், குறிப்பிட்ட நேரத்துக்குள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என, பள்ளிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாலை, 5:00 முதல், 8:00 மணிக்குள்; மாலை, 5:00 முதல், 7:00 மணிக்குள், நடைபயிற்சியை முடித்துக்கொள்ள வேண்டும். மற்ற நேரங்களில், பள்ளி வளாகத்துக்குள் இருந்து, பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts:

0 comments:

Post a Comment