வீட்டில் சிறப்பாக படிப்பது எப்படி
11/03/2016
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடங்களுக்கான நேர அட்டவணை இருப்பதுபோல
வீட்டிலும் படிக்கும் பாடங்களுக்கான அட்டவணை இருப்பது முக்கியம்.
ஏனெனில் பள்ளியில் பாடங்களை கூர்ந்து கவனிப்பது எந்தளவிற்கு
அவசியமோ, அதேஅளவு அந்தப் பாடங்களை வீட்டில் வந்து படித்து, நம் நினைவில்
வைப்பதும் நிச்சயம் தேவையான ஒன்று. பள்ளியிலும், வீட்டிலும் சூழல் நிறைய
மாறுபடுகிறது. பள்ளியில் சக மாணவர்களோடும், ஆசிரியர்களோடும் இருந்துவிட்டு,
வீட்டிற்குள் வந்தவுடன் அமைதியும், தனிமை உணர்வும் ஏற்படுகிறது.
அந்த சூழலில்தான் நமது படிப்பிற்கான திட்டமிடுதலை தொடங்க
வேண்டியுள்ளது.மேலும் அரசு தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் அதிகமாக
விடுமுறைகள் இருக்கும். படிப்பதற்கென்றே விடப்படும் அந்த விடுமுறை நாட்களை
படிப்பில் சரியான முறையில் செலவழிப்பதற்கு நாம் முறையான திட்டமிடுதல்களை
செய்ய வேண்டும்
பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் அதிக நேரம் தொடர்ந்து படிக்க வேண்டும்
என்று ஆசைப்படுகின்றனர். அவ்வாறு படித்தால்தான் சிறப்பாக படிக்க முடியும்
என்றும் நம்புகின்றனர். தங்களின் பிள்ளைகள் அதிக நேரம் தொடர்ந்து படிப்பதை
பெருமையாகவும் கருதுகின்றனர். ஆனால் இது மிகவும் தவறான ஒரு நம்பிக்கை.
இதனால் மாணவர்கள் சோர்ந்துபோய் விடுவார்கள். ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை
நாம் 10 நிமிடங்கள் இடைவெளி எடுத்தாலும்கூட, தொடர்ச்சியாக 4
மணிநேரங்களுக்கும் மேலாக ஒருவர் படிப்பது நல்லதல்ல. இதனால் மூளையின் ரசாயன
செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, நாம் படிப்பது நினைவில் நிற்காமல்
போகலாம்.ஒவ்வொரு பணியுமே முறையான இடைவெளியை கொண்டதாக இருக்க வேண்டும்.
நீண்டநேரம் தொடர்ந்து படிப்பதன்மூலம் மாணவர்களின் மூளை ஏற்புத்திறன்
குறைந்து, படிப்பதை உள்வாங்கும் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. எனவே ஒரு
செயல்பாடானது சரிசமமான இடைவெளியைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான்
மூளை நன்கு செயல்படும்.படிப்பின்போதான சிறிதுநேர ஓய்விற்குப் பிறகு
மீண்டும் உடனேயே படிப்பை தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு
பதிலாக படிப்போடு சம்பந்தப்பட்ட வேறு சில நடவடிக்கைகளை செய்யலாம். அந்த
நடவடிக்கைகளை படிப்பிற்கு திட்டமிடும்போதே முடிவுசெய்து வைத்துக்கொள்ள
வேண்டும்.ஒரு குறிப்பிட்ட பாடத்தை தொடர்ச்சியாக உள்வாங்கும் திறன் ஒரு
மாணவரின் மூளைக்கு சுமார் 40 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே இருக்கிறது.
இதன் அடிப்படையில்தான் பள்ளிகளில் ஒவ்வொரு முக்கால் மணி நேரத்திற்கும் ஒரு
ஆசிரியர் மாறி, பாடங்களும் மாறுகிறது. வீட்டில் அதிகபட்சம் ஒரு பாடத்தை ஒரே
நேரத்தில் ஒருவர் ஒரு மணிநேரம் படிக்கலாம். பின்னர் சிறிது இடைவெளி
நிச்சயம் தேவை. அந்த நேரத்தில் தண்ணீரோ, தேநீர் அல்லது காபியோ
அருந்தலாம்.ஆனால் அந்த இடைவெளியானது விளையாடுவதற்கோ, டி.வி. பார்ப்பதற்கோ
செலவிடப்படக்கூடாது. ஏனெனில் அதன்பிறகு மீண்டும் படிப்பிற்கு திரும்புவது
சிரமமாகிவிடும். அதேசமயம் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தனியாக நேரம்
ஒதுக்கப்பட வேண்டும். படிப்பின்போது இடைவெளி விடுவதற்கான முக்கிய நோக்கமே
கண்களுக்கும், திசுக்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
ஒரே முறையில் உட்கார்ந்து படிப்பதால் ஒரு மாணவர் விரைவில் சோர்வடைந்து,
அதன்மூலம் மன அழுத்தமும் அதிகமாகிறது.ஒரு நாள் முழுவதும் படிக்கையில்,
பாடத்தை மாற்றி மாற்றி படித்தால் சோர்வை தவிர்க்கலாம். உதாரணமாக நீங்கள்
வரலாற்றுப் பாடத்தை படித்துவிட்டு, பின்னர் இயற்பியலைப் படிக்கலாம்.
இதைத்தவிர வேறுசில வழிமுறைகளும் உள்ளன. நீங்கள் பாட சம்பந்தமாக எழுதும்
வேலையை செய்துகொண்டிருந்தால், அதைமுடித்துவிட்டு படிக்கும் வேலையை
தொடங்கலாம். மேலும் அறிவியல் பாடங்களில் உள்ள படங்களையும் வரைந்து
பார்க்கலாம். இதன்மூலம் உங்களின் மூளை விரைவில் சோர்வடையாமல் தவிர்த்து,
பாடத்தை நன்றாக நினைவில் பதிய வைக்கலாம்.படிப்பதில், மேலே சொன்னதைப் போன்ற
மாற்று நடவடிக்கைகள் சிறந்த பலனளிப்பதாக இருந்தாலும், இந்த செயல்முறை
அனைவருக்கும் ஒரேமாதிரியாக ஒத்துவரும் என்று சொல்லிவிட முடியாது.
ஒவ்வொருவரும் தங்களின் மனோநிலை மற்றும் விருப்பத்திற்கேற்ப திட்டங்களை
மாற்றிக்கொள்ள வேண்டும். படிக்கும் செயல்முறையில் நாம் வகுக்கும்
திட்டமானது, முறையாக பின்பற்றக்கூடியதாகவும், நமக்கு ஒத்துவரக்கூடியதாகவும்
இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம்தான்
நாம் அதிகமான பலன்களைப் பெறமுடியும். Thanks to Kalvimalar
0 comments:
Post a Comment